செஞ்சிக்கோட்டை கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


செஞ்சிக்கோட்டை  கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 2 May 2022 5:05 PM GMT (Updated: 2 May 2022 5:05 PM GMT)

செஞ்சிக்கோட்டை கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

செஞ்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு செஞ்சி பீரங்கி மேட்டில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் கமலக்கண்ணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, பூஜைகளுடன் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் அறங்காவலரும், மாவட்ட கவுன்சிலருமான அரங்க ஏழுமலை, தொழிலதிபர் ஆர்.கே.ஜி. ரவி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தீபாவளி என்ற ஏழுமலை உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. 10-ம் நாள் விழாவாகன வருகிற 10-ந் தேதி(செவ்வாய்கிழமை) தேர்த்திருவிழா நடைபெறுகிறது. 

இதை முன்னிட்டு அன்று காலை 108 பால்குட ஊர்வலம், 10 மணிக்கு கூழ்வார்த்தல் அதைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும், பகல் 1.30 மணிக்கு மேல் தேர் திருவிழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செஞ்சிக்கோட்டைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு 10 நாட்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதி வழங்கப்படுவதாக செஞ்சிக்கோட்டையை பராமரித்து வரும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

Next Story