ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு - கலெக்டர் ரமேஷ் பேட்டி


ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு - கலெக்டர் ரமேஷ் பேட்டி
x
தினத்தந்தி 11 May 2022 4:20 PM GMT (Updated: 11 May 2022 4:20 PM GMT)

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிக்கமகளூருவில் ராகி கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


சிக்கமகளூரு:

விவசாயிகள் கோரிக்கை

  சிக்கமகளூரு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அந்த வகையில் கடூர் தாலுகாவில் ராகி, கோதுமை, கரும்பு, மக்காச்சோளம் ஆகியவை பயிரிடப்படுகின்றன.

 அவற்றை அரசு அமைத்துள்ள கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.இதனால் அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகளுக்கு உரிய லாபம் முழுமையாக கிடைக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு கொள்முதல் நிலையங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

  இந்த நிலையில் அரசு கொள்முதல் நிலையங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொள்முதல் நிலையங்கள்

  சிக்கமகளூருவில் அனைத்து தாலுகாக்களிலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த 4 மாதத்திற்கு முன்பு அனைத்து கொள்முதல் மையங்களும் மூடப்பட்டன.

  இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிக்கமகளூரு மாவட்டம் கடூர், தரிகெரே உள்ளிட்ட தாலுகாக்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இதன் மூலம் ராகி மூட்டைகளை அரசு கொள்முதல் செய்ய உள்ளது. மேலும், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ஆதரவு விலையை அரசு நேரடியாக செலுத்தும்.
  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story