நிதி ஒதுக்குவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் கூடலூரில் வீடுகள் கட்டுமான பணி பாதியில் நிறுத்தம்

நிதி ஒதுக்குவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் ஆதிவாசி மக்களுக்கு கட்டப்படும் வீடுகளின் கட்டுமானப் பணி பாதியில் நிற்கிறது. இதனால் ஆதிவாசி மக்களின் குடும்பங்கள் மழையில் நனைந்து வருகிறது.
கூடலூர்
நிதி ஒதுக்குவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் ஆதிவாசி மக்களுக்கு கட்டப்படும் வீடுகளின் கட்டுமானப் பணி பாதியில் நிற்கிறது. இதனால் ஆதிவாசி மக்களின் குடும்பங்கள் மழையில் நனைந்து வருகிறது.
கொட்டகையில் வசிக்கும் மக்கள்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆதிவாசி மக்கள் கணிசமாக கொட்டகையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான ஆதிவாசி கிராமங்களில் கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிறது. இதனால் ஆதிவாசி குடும்பங்கள் கொட்டகையில் தொடர்ந்து வசித்து வருகிறது.
கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சி கொரவயல் ஆதிவாசி கிராமத்தில் 22 குடும்பங்களுக்கு கடந்த ஆண்டு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதனால் தற்காலிகமாக ஆதிவாசி மக்கள் கொட்டகை மற்றும் பிளாஸ்டிக் விரிப்புகள் கொண்டு மேற்கூரை அமைத்து குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். கூடலூர் பகுதியில் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை மழைக்காலம் என்பதால் முன்கூட்டியே வீடுகள் கட்டப்படும் என ஆதிவாசி மக்கள் எதிர்பார்த்தனர்.
கட்டுமான பணி பாதியில் நிறுத்தம்
ஆனால் இதுவரை புதிய வீடுகள் கட்டுமான பணி முழுமை பெறவில்லை. சுவர்கள் கட்டப்பட்ட நிலையில் கான்கிரீட் மேற்கூரை அமைக்க வில்லை. இதனிடையே கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆதிவாசி மக்கள் தொடர்ந்து மழையில் நனைந்தவாறு கொட்டகையில் குடும்பத்தினருடன் வசிக்கும் அவல நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆதிவாசி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறும் போது, 22 குடும்பத்திற்கு வீடுகள் கட்டி தருவதாக கூறி கட்டுமான பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால் இதுவரை பணி நிறைவு பெறவில்லை. தொடர்ந்து பணி ஒப்பந்ததாரர்களிடம் கேட்டபோது நிதி ஒதுக்குவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக தெரிவித்தனர். எனவே மழைக் காலத்திற்கு முன்பாக போதிய நிதியை விரைவாக ஒதுக்கி வீடு கட்டுமான பணியை பூர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story