கொதிகலனில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

பெங்களூரு அருகே கொதிகலனில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் பலியானார்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் டாபஸ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோம்புரா கிராமத்தை சேர்ந்தவர் சாகப்பா(வயது 54). இவர், டாபஸ்பேட்டையில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்தாா். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் அவர் வேலைக்கு சேர்ந்திருந்தார். நேற்று மாலையில் தொழிற்சாலையில் உள்ள ராட்சத கொதிகலனை சுத்தம் செய்யும்படி சாகப்பாவிடம் மேல் அதிகாரி கூறியுள்ளாா். உடனே அவரும் கொதிகலன் மீது ஏறி நின்றபடி சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக கால் தவறி கொதிகலனில் இருந்து சாகப்பா கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினாா். உடனே அங்கிருந்தவர்கள் சாகப்பாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் கொதிகலனில் நின்று சாகப்பா வேலை செய்ததால், அவர் கீழே தவறி விழுந்து பலியானதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதுகுறித்து டாபஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






