மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு சமையல் கியாஸ் மானியம் நீட்டிப்பு


மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு சமையல் கியாஸ் மானியம் நீட்டிப்பு
x

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்தது.

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 4 சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாக வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை நேற்று முடிவு செய்தது.

இதுதொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், அகவிலைப்படி, அகவிலை நிவாரணத்தை உயர்த்தும் முடிவால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் மத்திய ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.

அதேநேரம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.12 ஆயிரத்து 815 கோடி கூடுதல் செலவாகும்.

கடந்த ஜனவரி 1-ந்தேதியை அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் கூடுதல் தவணைகள் விடுவிக்கப்படும்.

7-வது மத்திய சம்பள ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்கப்பட்ட வீதத்தில் தற்போதைய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

சமையல் கியாஸ் மானியம் நீட்டிப்பு

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் ரூ.200 மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் அதிக விலையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அனுராக் தாக்கூர் கூறினார். இதனால் 9.6 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story