வீல்சேர் வழங்காததால் பயணி உயிரிழந்த விவகாரம்; ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. அதிரடி உத்தரவு


வீல்சேர் வழங்காததால் பயணி உயிரிழந்த விவகாரம்;  ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 29 Feb 2024 9:22 AM GMT (Updated: 29 Feb 2024 9:30 AM GMT)

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காமல் நடந்து சென்ற 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

புதுடெல்லி,

அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து கடந்த 12-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பாபு பட்டேல் (80) என்ற முதியவர், தனது மனைவி நர்மதா பென்னுடன் (76) மும்பை வந்தார். அவர் விமான டிக்கெட் எடுக்கும் போதே 2 வீல்சேருக்கும் முன்பதிவு செய்து இருந்தார். ஆனால் மும்பை வந்தவுடன் வீல்சேர் பற்றாக்குறை காரணமாக அவருக்கு வீல் சேர் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மனைவியை மட்டும் வீல்சேரில் செல்லுமாறு கூறி விட்டு, பாபு பட்டேல் நடந்தே சென்றார்.

அதனால், இமிகிரேஷன் கவுன்ட்டருக்கு முதியவர் நடந்து சென்றார். அப்போது, திடீரென அந்த முதியவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முதியவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, வீல்சேர் இல்லாததால் பயணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டு இருந்தது. ஏர் இந்தியாவின் விளக்கம் ஏற்கும் படியாக இல்லைஎன் கூறிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், விமான போக்குவரத்து நிறுனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.


Next Story