விளைநிலங்களில் புகுந்து 10 காட்டு யானைகள் அட்டகாசம்


விளைநிலங்களில் புகுந்து 10 காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 2 Sep 2023 6:45 PM GMT (Updated: 2 Sep 2023 6:45 PM GMT)

மாஸ்தி அருகே விளைநிலங்களில் புகுந்து 10 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இந்த நிலையில் வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பங்காருபேட்டை

காட்டு யானைகள் அட்டகாசம்

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா மாஸ்தி அருகே சஞ்சேலி கிராமம் தமிழக வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் தமிழக வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

வனத்துறையினரும் காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ரூ.15 லட்சம் நஷ்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10 காட்டு யானைகள், வனப்பகுதியையொட்டி உள்ள விளைநிலங்களில் புகுந்தன.

அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் வெங்கடேஷ், மஞ்சுநாத், நாராயணா, சண்முகம், முருகன் ஆகியோருக்கு சொந்தமான விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள் அங்கு சாகுபடி செய்திருந்த முட்டைகோஸ், கேழ்வரகு, மக்காச்சோளம், துவரை, வேர்க்கடலை ஆகிய பயிர்களை மிதித்து நாசப்படுத்தின.

இதையடுத்து அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இந்த நிலையில் காட்டு யானைகள் புகுந்து விளைநிலங்களில் அட்டகாசம் செய்ததால் ரூ.15 லட்சம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள் முற்றுகை

இதுகுறித்து வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது வனத்துறையினரை அந்தப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் நிரந்தரமாக காட்டு யானைகள் அட்டகாசம் இருந்து வருகிறது. மழை பொய்த்தாலும், டேங்கர் லாரிகளில் தண்ணீர் வாங்கி சாகுபடி செய்து வருகிறோம்.

ஆனால் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வனத்துறையினர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story