சோனியா காந்தி, அஸ்வினி வைஷ்ணவ் உள்பட 14 பேர் ராஜ்யசபை எம்.பி.க்களாக பதவியேற்பு


சோனியா காந்தி, அஸ்வினி வைஷ்ணவ் உள்பட 14 பேர் ராஜ்யசபை எம்.பி.க்களாக பதவியேற்பு
x

சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து உறுப்பினராகி உள்ளார். மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மேலவையில் (ராஜ்யசபை) பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 14 பேர் எம்.பி.க்களாக இன்று பதவியேற்று கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று முறைப்படி நடைபெற்றது. இதில், குடியரசு துணை தலைவர் மற்றும் ராஜ்யசபையின் தலைவரான ஜெகதீப் தங்கார் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இதன்படி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர். இதில், சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து உறுப்பினராகி உள்ளார். மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவரான அஜய் மேக்கன் கர்நாடகாவில் இருந்தும், பா.ஜ.க.வின் மூத்த தலைவரான ஆர்.பி.என். சிங் உத்தர பிரதேசத்தில் இருந்தும், பா.ஜ.க. உறுப்பினர் சமீக் பட்டாச்சார்யா மேற்கு வங்காளத்தில் இருந்தும் பதவியேற்று கொண்டனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான கோலா பாபு ராவ், மேத ரகுநாத் ரெட்டி மற்றும் எரும் வெங்கட சுப்பாரெட்டி ஆகியோர் ஆந்திர பிரதேசத்தில் இருந்து பதவியேற்று கொண்டனர். இதன்பின் அவர்கள் அனைவரும் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்காருடன் சேர்ந்து ஒன்றாக குழு புகைப்படம் ஒன்றும் எடுத்து கொண்டனர்.

சோனியா காந்தி முதன்முறையாக ராஜ்யசபை உறுப்பினராகி உள்ளார். அவர், அவை தலைவர் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் பதவியேற்று கொண்டார். இந்த பதவி பிரமாண நிகழ்ச்சியின்போது, அவருடைய மகள் பிரியங்காக காந்தியும் கலந்து கொண்டார். துணை தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் பொது செயலாளர் பி.சி. மோடி ஆகியோரும் உடனிருந்தனர்.


Next Story