சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த மனித உடலை சாப்பிட்ட இருவர் கைது


சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த மனித உடலை சாப்பிட்ட இருவர் கைது
x

ஒடிசாவில் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையில் பாதி எரிந்து முடிந்த உடலை தின்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயூர்பஞ்ச்,

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையில் பாதி எரிந்து முடிந்த உடலை தின்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயூர்பஞ்ச் மாவட்டம் தந்துனி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மோகன் சிங் (58) மற்றும் நரேந்திர சிங் (25) ஆகியோர் குடிபோதையில் சுடுகாட்டிற்கு சென்று அங்கு தகன மேடையில் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலின் சதையை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை உடல்நலம் பாதிக்கப்பட்டு பிஆர்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 25 வயதான மதுஸ்மிதா சிங் என்ற இளம்பெண் உயிரிழந்தார். அந்த பெண்ணின் உடல் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. சடலம் எரியூட்டப்பட்ட சில நிமிடங்களில் குடிபோதையில் இருந்த நரேந்திர சிங் மற்றும் மோகன் சிங் இருவரும் சடலத்தை பிய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களின் செயலால் அதிர்ச்சியடைந்த உயிரிழந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இருவரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பந்தாசாஹி போலீசார், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர், உயிரிழந்த இளம்பெண் மதுஸ்மிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Next Story