துருக்கிக்கு உதவ 2 விமானப்படை விமானங்களை மருத்துவக் குழுக்களுடன் அனுப்பியது இந்தியா


துருக்கிக்கு உதவ 2 விமானப்படை விமானங்களை மருத்துவக் குழுக்களுடன் அனுப்பியது இந்தியா
x

நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயுள்ள துருக்கிக்கு இந்திய உதவிக்கரம் நீட்டி வருகிறது.

அங்காரா,

துருக்கியில் கடந்த 36 மணி நேரமாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை முடக்கி போட்டுள்ளது. துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. துருக்கி நிலநடுக்கம் காரணமாக 6 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகி உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 25 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், துருக்கி நாட்டிற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பாக நிவாரண பொருட்கள், மருந்துகள், உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதோடு 100 மீட்பு படை வீரர்கள் துருக்கி சென்றுள்ளனர்.

இதே போன்ற சரக்குகளைக் கொண்ட இரண்டாவது விமானம் நண்பகலில் துருக்கிக்கு அனுப்பப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு 99 பேர் கொண்ட மருத்துவக் குழுவைத் திரட்டியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

"இந்த குழுவில் மருத்துவ நிபுணர்கள் உள்ளனர் மற்றும் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவ வசதியை நிறுவ எக்ஸ்ரே இயந்திரங்கள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள், இதய கண்காணிப்பாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன" என்று இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சவாலான தருணத்தில் இந்தியா தனது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது" என்று வெளியுறவு மந்திரி எஸ் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் துருக்கி மக்களுக்கு இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது" என்று பாதுகாப்பு மந்த்ரி ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகள், நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களைத் தேட உதவுவதற்காக துருக்கிக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களை அனுப்பி வருகின்றன.


Next Story