வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது கஞ்சா விற்பனை போட்டியில் தீர்த்து கட்டியது அம்பலம்


வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது  கஞ்சா விற்பனை போட்டியில் தீர்த்து கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 6:46 PM GMT)

தேவரமனே சுற்றுலா தலத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் மங்களூருவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

தேவரமனே சுற்றுலா தலத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் மங்களூருவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் பிணம் மீட்பு

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா தேவரமனே சுற்றுலா தலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரின் பிணம் கிடந்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் மூடிகெரே போலீசிற்கு இது குறித்து தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் பண்ட்வால் பகுதியை சேர்ந்த முகமது சவாத் என்று தெரியவந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த மூடிகெரே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் யாரோ இவரை கொலை செய்துவிட்டு, உடலை தேவரமனே சுற்றுலா தலத்தில் வீசிவிட்டு சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடந்தது. அந்த விசாரணையில் கஞ்சா வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டியில் சவாத் கொலையாகி இருப்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்டார்

அதாவது தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலை சேர்ந்த ரிஸ்வான், சைனுல்லா ஆகிய 2 பேர் சவாத்தை கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. பண்ட்வால் பகுதியில் சவாத், இவர்கள் 2 பேருக்கும் போட்டியாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனால் சவாத் மீது ரிஸ்வான், சைனுல்லானுக்கு கோபம் ஏற்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுப்பி மாவட்டம் படுபித்ரிக்கு சமாதானம் பேசுவதற்காக அழைத்து சென்றனர்.

அங்கு சவாத்தை, 2 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவிற்கு எடுத்து வந்து, தேவரமனே சுற்றுலாதலத்திற்குட்பட்ட பகுதியில் போட்டுவிட்டு சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மூடிகெரே போலீசார் ரிஸ்வான், சைனுல்லா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இது குறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த மூடிகெரே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையில் பண்ட்வால் போலீசில் சவாத் மாயமானதாக வழக்கு பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பண்ட்வால் போலீசார் அவர்களை மங்களூரு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story