துங்கா ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த 2 பேர் சாவு


துங்கா ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த 2 பேர் சாவு
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:46 PM GMT)

சிவமொக்காவில் துங்கா ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சிவமொக்கா-

சிவமொக்காவில் துங்கா ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சுற்றுலா சென்றனர்

பெங்களூரு மாகடி ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). இவரது நண்பர் சஞ்சய் (25). இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் 2 பேரும் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சுற்றுலா செல்வது வழக்கம். இந்தநிலையில், சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி அவர்கள் நண்பர்களுடன் சிவமொக்காவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 9-ந்தேதி கவுதம், சஞ்சய் மற்றும் நெலமங்களா அருகே உள்ள லக்கனஹள்ளியை கிரீஷ் ஆகிய 3 பேரும் காரில் சிவமொக்காவுக்கு காரில் சென்றனர். அவர்கள் பீமனகட்டே தொங்கும் பாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட்டு கம்மரடியில் உள்ள விடுதியில் தங்கினர்.

ஆற்றில் மூழ்கினர்

பின்னர் மறுநாள் அவர்கள் 3 பேரும் தீர்த்தஹள்ளி தாலுகா பீமனகட்டே கிராமத்தில் ஓடும் துங்கா ஆற்றுக்கு குளிக்க ெசன்றனர். அங்கு அவர்கள், 3 பேரும் ஆற்றில் ஜாலியாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது கவுதம் ஆழமான பகுதிக்கு சென்றதாக தொிகிறது. இதனால் அவர், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சஞ்சய், கவுதமை காப்பாற்ற சென்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கிரீஷ் காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கியதால் அவரால் காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து கிரீஷ், தீர்த்தஹள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரப்பர் படகு மூலம் சஞ்சய், கவுதம் ஆகிய 2 பேரை தேடினர்.

பிணமாக மீட்பு

பின்னர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். இதையடுத்து 2 பேர்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தீர்த்தஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story