ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: சிவமொக்காவில் பதுங்கிய 2 பேர் கைது- குண்டு வெடிப்புகளை நடத்த திட்டமிட்டது அம்பலம்


ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: சிவமொக்காவில் பதுங்கிய 2 பேர் கைது- குண்டு வெடிப்புகளை நடத்த திட்டமிட்டது அம்பலம்
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:45 PM GMT)

சிவமொக்காவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்தது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு:

2 பேர் கைது

சிவமொக்கா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி மற்றும் சிவமொக்கா டவுன் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர் பதுங்கி இருப்பதாக கர்நாடக மாநில உளவுத்துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில் இதுபற்றி மாநில உளவுத்துறை சிவமொக்கா போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இந்த நிலையில் பயங்கரவாத அமைப்புன் தொடர்பில் இருந்த சையது யாசின் உள்பட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அதாவது சையது யாசின், ஷாரிக், மாஷ் முனீர் அகமது ஆகிய 3 பேர் சிவமொக்காவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது. அதில் சையது யாசின் உள்பட 2 பேரை மட்டும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சையது யாசின் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஆவார். அவர்தான் இந்த கூட்டத்தில் முக்கிய நபர் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இவர்களது கூட்டத்தில் ஒருவருக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள்

கைதான சையது யாசின் உள்பட 2 பேரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இருந்து வந்ததும், அவர்கள் பயங்கரவாதம் மற்றும் வெடிகுண்டுகளை கையாள்வது குறித்து பயிற்சிகளை எடுத்துக் கொண்டதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வெடிகுண்டுகளை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

அவர்கள் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டு பதுங்கி இருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கைதான 2 பேரையும் தற்போது போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இதுபற்றி மாநில உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

உபா சட்டம்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிவமொக்காவில் பதுங்கி இருந்த தகவலைக் கேட்டு அதிர்ந்து போனேன். இதுபற்றி விசாரித்து அவர்களை கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டேன். அதன்பேரில் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.(இஸ்லாமிக் ஸ்டேட்)-ன் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

கைதான 3 பேர் மீதும் 'உபா' சட்டம் பாய்ந்துள்ளது. இவர்களுடன் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் மங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

சிவமொக்கா மாவட்டத்தில் ஏற்கனவே ஹிஜாப் விவகாரம், வீரசாவர்க்கர் பிரச்சினை, இந்து பிரமுகர் மீது தாக்குதல் என பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பயங்கரவாதிகள் கைதாகி இருப்பது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story