நடப்பு ஆண்டில் ஏப்ரல்-செப்டம்பரில் 2 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்


நடப்பு ஆண்டில் ஏப்ரல்-செப்டம்பரில் 2 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Oct 2023 8:24 AM GMT (Updated: 25 Oct 2023 9:22 AM GMT)

நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், சுங்க துறை சார்பில் 2 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தங்கம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் தங்க இறக்குமதி நடைபெறுகிறது. எனினும், ஆண்டுதோறும் நாட்டில் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கத்தின் அளவும் அதிகரித்து வருகிறது.

இதன்படி, நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், சுங்க துறை சார்பில் 2 ஆயிரம் கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 1,400 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

2022-ம் நிதியாண்டில் மொத்தம் 3,800 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கான காரணம் தெரியவரவில்லை.

நேபாளம் மற்றும் மியான்மர் எல்லைகள் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது என அதுபற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022-ம் ஆண்டில் நாட்டில் அதிக அளவாக கேரளாவில் 755.81 கிலோ தங்க கடத்தல் நடந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து மராட்டியம் (535.65 கிலோ) மற்றும் தமிழகம் (519 கிலோ) உள்ளது.

2022-ம் ஆண்டில் 3,982 தங்க கடத்தல் வழக்குகளும், அதற்கு முந்தின 2021-ம் ஆண்டில் 2,445 தங்க கடத்தல் வழக்குகளும் பதிவாகி இருந்தன.


Next Story