மராட்டிய மாநிலத்தில் அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியத்துடன் 2 பேர் கைது


மராட்டிய மாநிலத்தில் அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியத்துடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2016 8:45 PM GMT (Updated: 21 Dec 2016 8:45 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் அணுகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான ரூ.30 கோடி மதிப்பிலான யுரேனியத்துடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

மராட்டிய மாநிலத்தில் அணுகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான ரூ.30 கோடி மதிப்பிலான யுரேனியத்துடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

யுரேனியம் பறிமுதல்

மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த தானேவில் உள்ள ஒரு ஓட்டல் அருகே, அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியத்தை விற்பனை செய்ய சிலர் கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் கையில் பைகளுடன் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த பைகளில் பட்டுத்துணியில் சுற்றப்பட்ட நிலையில் கருப்பு நிறத்தில் பளபளப்புடன் இருந்த கட்டிகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவை யுரேனியம் என்பது தெரியவந்தது. அந்த யுரேனியம் 8 கிலோ 861 கிராம் எடை கொண்டதாக இருந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

ரூ.30 கோடி மதிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட யுரேனியத்தின் இந்திய மதிப்பு ரூ.30 கோடி ஆகும். சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி என போலீசார் தெரிவித்தனர். விசாரணையில், கைதான இருவரும் மும்பையைச் சேர்ந்த கிஷோர் விஸ்வநாத், வஜாஹத்வுல்லாகான் என்பது தெரியவந்தது.

இவர்களுக்கு யுரேனியம் எப்படி கிடைத்தது? யாரிடம் அதனை விற்பனை செய்ய கொண்டு வந்தனர்? பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதற்கு கொண்டு வரப்பட்டதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story