பான் மசாலா, குட்காவிற்கு உ.பியிலும் விரைவில் தடை

பான் மசாலா, குட்காவின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உ.பியிலும் தடை விதிக்கப்படவுள்ளது.
லக்னோ
புதிதாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத் அரசு ஏற்கனவே அரசு அலுவலகங்களில் பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் தற்போதைய அரசு இப்பொருட்கள் உடல் நலத்திற்கு கடும் தீங்கை கொடுப்பதால் தடை விதிக்கும் முடிவினை எட்டியுள்ளதாக கூறினார்.
விரைவில் அரசு இவற்றை தயாரிக்கும் தொழிலகங்களை மூடவும் ஆணையிடலாம் என்றும் அவர் தெரிவித்தார். மார்ச் மாதம் பதவியேற்றவுடன் தலைமைச் செயலகத்திற்கு விஜயம் செய்து யோகி ஆதித்யநாத் சுவர்களிலும், படிகளிலும் சிவப்புக் கறைகள் படிந்து கிடப்பதைக் கண்டு கடும் கோபம் கொண்டார், அதற்கு முன்னர் லக்னோ உயர்நீதிமன்றம் இப்பொருட்களுக்கு தடை விதித்தது. இருப்பினும் இவை அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கின்றன.
முந்தைய அகிலேஷ் அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றினால் இப்பொருட்களை தடை செய்தது. கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்தே நீதிமன்றத்தின் தடை இருந்தாலும் இத்தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் 13 மாநிலங்கள் இப்பொருட்களுக்கு தடை விதித்துள்ளன. உ.பி அரசு இப்பொருட்களின் விற்பனையால் கிடைக்கும் ரூ. 300 கோடியை கருத்தில் கொண்டு குட்காவிற்கு தடை விதிக்க தயங்கியது.
ஒரு கணக்கீட்டின்படி உ.பி மாநிலத்தில் 2.5 லட்சம் பேர் புற்றுநோயினால் அவதிப்படுகின்றனர். இதில் புகையிலை பழக்கத்தினால் 75,000 பேர் நோயுற்றுள்ளனர் என்கிறது.
Related Tags :
Next Story