கேமராவில் சிக்கியது: குறைவான மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியரை கொடூரமாக தாக்கிய மாணவன்!

கணக்கு பரிச்சையில் குறைவான மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியரை 12-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக தாக்கிய காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சண்டிகார்,
அரியானா மாநிலம் பாகதூர்கார்கில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவன், ஆசிரியரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்து உள்ளது. கணக்கு பரிச்சையில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதற்காக ஆசிரியரை மாணவன் தாக்கிய காட்சி பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. காலையில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத போது, பள்ளி பையில் இருந்து கூர்மையான ஆயுதம் ஒன்றை எடுக்கும் மாணவன், வகுப்பறையில் அமர்ந்து இருக்கும் ஆசிரியர் ரவிந்தரை தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
மாணவன் ஆசிரியரை கழுத்து, முதுகு, தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது. ஆசிரியர் வலிதாங்க முடியாமல் நிறுத்து என கத்திக்கொண்டே வெளியே செல்கிறார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மாணவன் பேசுகையில், கணக்கு பரிச்சையில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதற்காக ஆசிரியர் திட்டியதாகவும், அதனால் தாக்கியதாகவும் குறிப்பிட்டு உள்ளார் என போலீஸ் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக விசாரணை செய்து வரும் போலீஸ் மாணவனை கைது செய்து உள்ளது, மாணவனுக்கு உதவி செய்த மற்றொரு மாணவனையும் கைது செய்து உள்ளது. காயம் அடைந்த ஆசிரியரை பள்ளி ஊழியர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர், அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story