வானிலை அறிக்கை: கனமழை வரும்; மோடியின் குஜராத் பயணம் பற்றி ராகுல் காந்தி கிண்டல்

பிரதமர் மோடி குஜராத்திற்கு இன்று பயணம் செய்ய உள்ள நிலையில் அங்கு கனமழை வரும் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வானிலை அறிக்கை வாசித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலம் ஆன குஜராத்திற்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில், ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வானிலை அறிக்கை: தேர்தல் வருவதனை முன்னிட்டு, குஜராத்தில் இன்று கனமழை வரும் என தெரிவித்துள்ளார்.
அவர் மற்றொரு செய்தியில், குஜராத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநிலத்திற்கு ரூ.12 ஆயிரத்து 500 கோடி அளவில் திட்டங்கள் வர உள்ளன என தெரிவித்துள்ளார்.
குஜராத்திற்கு தேர்தல் அறிவித்து விட்டால் அந்த மக்களுக்கு எந்த திட்டத்தினையும் பாரதீய ஜனதாவினால் அறிவிக்க முடியாது என்ற நிலை ஏற்படும். எனவே, குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் அடுத்தடுத்து தேர்தல்களை அறிவிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு பாரதீய ஜனதா மற்றும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
குஜராத்திற்கு டிசம்பர் 18ந்தேதிக்கு முன் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையாளர் ஏ.கே. ஜோதி கூறியுள்ளார்.