நள்ளிரவு பேரணியில் தொண்டர்களிடம் கோபப்பட்ட பிரியங்கா

அமைதியான முறையில் பேரணி செல்ல வேண்டும், அமைதியாக போராடுபவர்கள் மட்டுமே இங்கு இருங்கள் கூச்சலிட நினைப்பவர்கள் வீட்டுக்குச் செல்லலாம் என பிரியங்கா கடிந்து கொண்டார். #RahulGandhi #PriyankaGandhi
புதுடெல்லி
காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். உத்தர பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் இருந்து மரணமடைந்தார். இந்த இரு சம்பவங்ளும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாவதைக் கண்டித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று நள்ளிரவு டில்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.
பேரணியில் ராகுலின் சகோதரி பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். சில தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியபடி பேரணியில் பங்கேற்றனர்.
இதைக்கண்ட பிரியங்கா அந்த தொண்டர்களை கண்டித்தார். நாம் எந்த காரணத்துக்காக பேரணி நடத்துகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். எனவே மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சத்தம் போட வேண்டாம். அமைதியான முறையில் பேரணி செல்ல வேண்டும் என்றார். அமைதியாக போராடுபவர்கள் மட்டுமே இங்கு இருங்கள். கூச்சலிட நினைப்பவர்கள் வீட்டுக்கு செல்லலாம் என கடிந்து கொண்டார்.
Related Tags :
Next Story