டெல்லியில் புழுதி புயல் காரணமாக சென்னையிலிருந்து டெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத் செல்லும் 5 விமானங்கள் ரத்து


டெல்லியில் புழுதி புயல் காரணமாக சென்னையிலிருந்து டெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத் செல்லும் 5 விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 14 May 2018 3:10 AM GMT (Updated: 14 May 2018 3:10 AM GMT)

டெல்லியில் புழுதி புயல் காரணமாக சென்னையிலிருந்து டெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சமீபத்தில் புழுதிப்புயல் தாக்கியது. இதில் பலர் உயிர் இழந்தனர். இந்தநிலையில் டெல்லியை நேற்று மீண்டும் புழுதிப்புயல் தாக்கியது. டெல்லியில் நேற்று காலையில் கடுமையான வெயில் கொளுத்தியது. விடுமுறைநாளான நேற்று காலையிலேயே சூரியனின் வெப்பத்தினால் டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ஆனால் மாலை 4.30 மணி அளவில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. காலையில் கொடூரமாக முகத்தை காட்டிய சூரியன் திடீரென வானில் திரண்ட கருமேகங்களுக்குள் மறைந்தது. அப்போது டெல்லியை புழுதிப்புயல் தாக்கியது. மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் புழுதிக்காற்று வீசியது. அப்போது லேசான மழையும் பெய்தது.

இந்த திடீர் புழுதிப்புயலினால் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் பாதிப்புக்குள்ளானது. இதனால் அங்கு வரவேண்டிய 40 உள்நாட்டு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. ஸ்ரீநகர் – டெல்லி விமானம் அமிர்தசரசுக்கு திருப்பி விடப்பட்டது. புழுதிப்புயல் காரணமாக டெல்லியில் நேற்று மெட்ரோ ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது.புழுதிப்புயல் தாக்கியதில் 2 பேர் பலியானார்கள். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில், டெல்லி புழுதி புயல் காரணமாக  சென்னையிலிருந்து டெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் ஆகியுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


Next Story