கர்நாடக அரசியலில் அடுத்த சர்ச்சையும் சுப்ரீம் கோர்ட்டு சென்றது, காங்கிரஸ்-ஜேடிஎஸ் வழக்கு


கர்நாடக அரசியலில் அடுத்த சர்ச்சையும் சுப்ரீம் கோர்ட்டு சென்றது, காங்கிரஸ்-ஜேடிஎஸ் வழக்கு
x
தினத்தந்தி 18 May 2018 3:40 PM GMT (Updated: 18 May 2018 3:40 PM GMT)

கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்துக்கு எதிராக காங்கிரஸ் - ஜேடிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளது. #KGBoapaiah



புதுடெல்லி,


கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 78 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 38 உறுப்பினர்களும் உள்ளனர். சுயேச்சைகள் 2 பேரும் உள்ளனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. 

எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ள நிலையில் கர்நாடக சட்டசபைக்கு பா.ஜனதாவை சேர்ந்த கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 சட்டப்பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் தற்காலிக சபாநாயகரின் பொறுப்பானது மிகவும் முக்கியமானதாக உள்ளது. கே.ஜி.போப்பையா நியமனம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. 

வயது மூப்பு அடிப்படையில் 8 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி. தேஷ்பாண்டேவிற்கு முன்னுரிமையை கொடுக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவை சேர்ந்த கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 

கே.ஜி.போப்பையா தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டதற்கு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

கே.ஜி.போப்பையா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, அக்கட்சிகள் தரப்பில் இப்போது சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது, இதனையடுத்து வாக்குவதாம் ஏற்படவே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story