இளம்பெண் கற்பழிப்பு விவகாரம்; அரியானாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் கட்சி


இளம்பெண் கற்பழிப்பு விவகாரம்; அரியானாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்:  காங்கிரஸ் கட்சி
x
தினத்தந்தி 17 Sept 2018 5:15 PM IST (Updated: 17 Sept 2018 5:15 PM IST)
t-max-icont-min-icon

அரியானா இளம்பெண் கற்பழிப்பு விவகாரத்தினை அடுத்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

சண்டிகார்,

அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் சி.பி.எஸ்.இ. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக அரசு விருது பெற்றவர்.

சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று வாலிபர்கள் ஒரு காரில் கடத்தி சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று அந்த மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

அப்போது அந்த பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்த பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் புகாரை போலீசார் வாங்க மறுத்து உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் 3 குற்றவாளிகள் குறித்த தகவலை கூறி உள்ளார். தன்னை 8 முதல் 10 பேர் பாலியல் பலாத்காரம்  செய்து இருக்கலாம் என கூறி உள்ளார்.

இதில் பங்கஜ் என்ற முக்கிய குற்றவாளி ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருபவர் என தெரியவந்து உள்ளது.  மேலும் இந்த சம்பவத்தில் மணீஷ் மற்றும் நிஷ்ஷூ என்ற இரு வாலிபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர்கள் 3 பேரின் புகைப்படங்களை அரியானா  போலீசார் வெளியிட்டுள்ளனர்.  இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிஷு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டான்.
 
ராணுவ வீரர் பங்கஜ் மற்றும் மற்றொரு குற்றவாளி மணீஷ் ஆகிய இருவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. 

இந்த வழக்கில் குற்ற சம்பவத்திற்கு பின் பெண்ணுக்கு முதலில் சிகிச்சை அளித்த மருத்துவர் சஞ்ஜீவ் மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு உரிமையாளரான தீன்தயாள் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் புதிய போலீஸ் சூப்பிரெண்டாக ராகுல் சர்மா பொறுப்பேற்று கொண்டார்.  அவர் இந்த சம்பவத்தில் தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என கூறினார்.

இதேவேளையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விசயங்களில் ஒன்று என எஸ்.பி. ராகுல் சர்மா கூறியுள்ளார்.

ரேவாரி நகர மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இளம்பெண்ணின் நிலை சீராக உள்ளது.  அவர் உணவு எடுத்து கொள்கிறார்.  அவரது உடல்நலம் முன்னேற்றம் கண்டு வருகிறது என அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை முற்றிலும் சீர்கெட்டு உள்ளது.  மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.வான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், அரியானா அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? இங்கு சட்ட விதிகள் எதுவும் இல்லை என்பது போல் உள்ளது.  குற்றவாளிகள் சுதந்திரமுடன் உலா வருகின்றனர்.  நாட்டில் அரியானா போன்ற சிறிய மாநிலத்தில், கும்பல் கற்பழிப்பு வழக்குகள் முன்னணியில் இருப்பது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என கூறியுள்ளார்.
1 More update

Next Story