கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது


கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது
x
தினத்தந்தி 21 Sep 2018 12:02 PM GMT (Updated: 21 Sep 2018 12:02 PM GMT)

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம்,


கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயராக இருந்த பிராங்கோ மூலக்கல், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என கன்னியாஸ்திரி ஒருவர் புகார் தெரிவித்தார். 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 13 தடவை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசிடம் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து பிராங்கோ மூலக்கல் மீது இதுவரை தேவாலய நிர்வாகமும், போலீசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 19-ந் தேதி ஆஜராகுமாறு பேராயர் பிராங்கோவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். போலீசாரின் கைது நடவடிக்கையை தவிர்க்க பிரான்கோ மூலக்கல் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை 25-ந் தேதிக்கு ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. இதனையடுத்து சிறப்பு விசாரணை குழு முன் ஆஜரான பிராங்கோவிடம் போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டது. 

தொடர்ந்து மூன்றுநாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று அவரை போலீஸ் கைது செய்தது. இந்தியாவில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் புகார் தெரிவித்து, கைது செய்யப்பட்ட முதல் பேராயர் பிராங்கோ மூலக்கல். மூன்று நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் மதியம் கொச்சியில் அவரை போலீஸ் கைது செய்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story