பெண் பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவா? எம்.ஜே. அக்பருக்கு ஆதரவா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி


பெண் பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவா? எம்.ஜே. அக்பருக்கு ஆதரவா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 15 Oct 2018 3:55 PM GMT (Updated: 15 Oct 2018 3:55 PM GMT)

மீடூ பாலியல் புகார்கள் விவகாரத்தில் பெண் பத்திரிக்கையாளர்களுடன் உள்ளீர்களா? எம்.ஜே. அக்பருடன் உள்ளீர்களா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.



புதுடெல்லி,


 ‘மீ டூ’ இயக்கம் மூலம் வெளிநாட்டு செய்தியாளர்கள் உள்பட 11 பெண் பத்திரிகையாளர்கள் மத்திய மந்திரி எம்.ஜே.அக்பருக்கு எதிராக பாலியல் புகாரை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் பதவி விலக மறுப்பு தெரிவித்துவிட்ட எம்.ஜே. அக்பர், முதலாவதாக புகார் தெரிவித்த பத்திரிக்கையாளர் பிரியா ரமணிக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். ஆனால் பாலியல் வன்முறையாளரை அரசு பாதுகாக்கிறது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. 

இந்நிலையில் மீடூ பாலியல் புகார்கள் விவகாரத்தில் பெண் பத்திரிக்கையாளர்களுடன் உள்ளீர்களா? அல்லது எம்.ஜே. அக்பர் தொடர்ந்து உள்ள அவதூறு வழக்கிற்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா? என்பதை தெளிவுப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

“எம்.ஜே. அக்பருக்கு எதிராக 14 பெண்கள் புகார்களை தெரிவித்துள்ளார்கள். இந்த விவகாரங்களில் உங்களுடைய நிலைபாடு என்னவென்று பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட பெண்களிடம் அதனை தெரிவிக்க வேண்டும். பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் எந்த தரப்பில் உள்ளார் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்,” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்பிஎன் சிங் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சிக்கியபோதும் நடவடிக்கை கிடையாது, பிற கொடூரமான சம்பவங்களிலும் பிரதமர் மோடி எதனையும் பேசவில்லை என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.  


Next Story