பள்ளி உரிமையாளருக்கு வந்த பார்சல் வெடிகுண்டு - முன்னாள் மாணவர் சதிச்செயல்


பள்ளி உரிமையாளருக்கு வந்த பார்சல் வெடிகுண்டு - முன்னாள் மாணவர் சதிச்செயல்
x
தினத்தந்தி 17 Oct 2018 5:46 PM GMT (Updated: 17 Oct 2018 5:46 PM GMT)

பள்ளி உரிமையாளர் ஒருவருக்கு வந்த பார்சலில் வெடிகுண்டு இருந்தது. இதற்கு முன்னாள் மாணவர் ஒருவரின் சதிச்செயலே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் உப்லட்டா நகரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் உரிமையாளர் வித்தல் டொபாரியாவுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அது பரிசுப்பொருள் போன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அனுப்பியவர் முகவரியில், முன்னாள் மாணவர் என்றும், பள்ளி உரிமையாளருக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் அனுப்பி இருப்பதாகவும் எழுதப்பட்டு இருந்தது. பள்ளிக்கூட உரிமையாளர் டொபாரியா, அந்த பார்சலை திறந்தார். உள்ளே இருந்த பொருட்களை பார்த்து சந்தேகம் அடைந்து, அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

வெடிகுண்டு நிபுணர்கள் வந்தனர். ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் ஸ்விட்சை பயன்படுத்தி, குண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை கண்டனர். அந்த குண்டை ஒதுக்குப்புறமாக எடுத்துச் சென்று, வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தனர். பார்சல் வெடிகுண்டு அனுப்பிய முன்னாள் மாணவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.


Next Story