ராகேஷ் அஸ்தானா- அலோக் வர்மா அதிகார மோதலால் 14 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்


ராகேஷ் அஸ்தானா- அலோக் வர்மா அதிகார மோதலால்  14 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 24 Oct 2018 6:52 AM GMT (Updated: 24 Oct 2018 7:39 AM GMT)

ராகேஷ் அஸ்தானா- அலோக் வர்மா அதிகார மோதலால் 14 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மன்னேம் நாகேஷ்வர் ராவ் என்பது இவரது முழுப்பெயர். 1986ஆம் ஆண்டு ஒடிசா ஐபிஎஸ் பேட்ஜ்ஜை சேர்ந்தவர் இவராகும்.

இதற்கு முன்பாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் நாகேஷ்வர் ராவ். ரயில்வே காவல் துறையின் கூடுதல் இயக்குனராக பதவி வகித்த நாகேஷ்வர் ராவ், கடைசியாக சிபிஐ இணை இயக்குனராக பதவி வகித்தார்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பொரேநர்சாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ்வர் ராவ். முதுகலை கல்லூரிப் படிப்பை உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முடித்த இவர் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் ஆய்வு படிப்பை முடித்து விட்டு ஐபிஎஸ் அதிகாரியானவர்.

இந்த நிலையில் டிஐஜி எம்.கே.சின்ஹா உட்பட 13 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்தார், டி.ஐ.ஜி எம்.கே.சின்ஹா என்பது குறிப்பிடதக்கது.டிஐஜி தருண் கவுபா, எஸ்பி சதீஷ் தாகர், இணை இயக்குனர் வி.முருகேசன் ஆகியோர் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ இணை இயக்குனர் அருண் குமார் சர்மா, சாய் மனோகர்,  முருகேசன்,  மற்றும் டிஐஜி அமித் குமார்  ஆகியோரும் இடம்மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 


இணை போலீஸ் சூப்பிரெண்டு ஏ.கே பாசி   போர்ட்பிளேயருக்கு மாற்றப்பட்டு உள்ளா. துணை சூப்பிரெண்டு சிபிஐ எஸ்.எஸ்.கம்  ஜபல்பூருக்கு ஏசிபி யாக மாற்றப்பட்டு உள்ளார்.

டிஐஜி மணீஸ்குமார் சின்ஹா, டிஐஜி  தரூன் கியூபா, டிஐஜி ஜஸ்பர் சிங், டிஐஜி அனீஷ் பிரசாத், டிஐஜி கே.ஆர்.சவுராசியா,  ராம்கோபால், சூப்பிரெண்டு சதீஷ் தாகர் ஆகியோரும் மாற்றப்பட்டு உள்ளனர்.

Next Story