தமிழகத்தில் புயல் சேதத்தை மதிப்பிட உடனே மத்திய குழுவை அனுப்புங்கள் : உள்துறை மந்திரிக்கு, ப.சிதம்பரம் வேண்டுகோள்


தமிழகத்தில் புயல் சேதத்தை மதிப்பிட உடனே மத்திய குழுவை அனுப்புங்கள்  : உள்துறை மந்திரிக்கு, ப.சிதம்பரம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Nov 2018 11:30 PM GMT (Updated: 17 Nov 2018 9:56 PM GMT)

தமிழகத்தை கஜா புயல் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

புதுடெல்லி,

தமிழகத்தில் கஜா புயல் தாக்கியதால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்ய 2 உயர் அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்கும்படி ராஜ்நாத் சிங்கை வேண்டுகிறேன். அப்போதுதான் இவர்களால் நேரடியாக பார்வையிட்டு முழுமையாக வெள்ளச் சேதத்தை அறிந்திட முடியும்.

மாநில அரசின் அறிக்கையை பெற்ற பிறகே மத்திய குழுவை வெள்ளச் சேத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தக் குழு சேத பகுதிகளுக்கு வருவதற்கு 2–3 வாரங்கள் ஆகிவிடும்.

இதற்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுது மற்றும் மீட்பு பணிகள் நடந்து விடும் என்பதால் புயலால் ஏற்பட்ட தாக்கத்தை மத்திய குழுவால் முழுமையாக கண்டறிய இயலாது. எனவே மத்திய உள்துறை அமைச்சகம் வழக்கத்தில் உள்ள இந்த நடைமுறையை மாற்றியமைக்கும்படியும் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story