பேஸ்புக்கில் தேவசம் அமைச்சருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த அர்ச்சகர் சஸ்பெண்ட்


பேஸ்புக்கில் தேவசம் அமைச்சருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த அர்ச்சகர் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 22 Nov 2018 11:11 AM GMT (Updated: 22 Nov 2018 11:11 AM GMT)

பேஸ்புக்கில் தேவசம் அமைச்சருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



திருவனந்தபுரம், 


கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

எனவே சபரிமலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றனர். குறிப்பாக நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு சபரிமலையில் போலீசார் மேற்கொண்டுவரும் கெடுபிடிகளால் பக்தர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கடந்த 18-ம் தேதி சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றபோது பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சபரிமலை பிரச்சினை தொடர்பாக அம்மாநில  தேவசம் அமைச்சரவை விமர்சனம் செய்து கோவில் அர்ச்சகர் ஒருவர் பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 கேரளாவில் மலபார் தேவசம் போர்ட்டு கீழ் இயங்கும் மதியன் கூலம் சேத்திர பாலகா கோவிலின் தலைமை அர்ச்சகர் மாதவ நம்பூதிரி மோசமான வார்த்தைகளுடன் விமர்சனங்களை பேஸ்புக்கில் தெரிவித்தார். இவ்விவகாரம் அங்கு விவாதப்பொருளாக மாறியது. இதனையடுத்து தேவசம் போர்டு கூட்டம் நடைபெற்றது. அமைச்சரை விமர்சனம் செய்த நம்பூதிரிக்கு எதிராக நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் அவரை சஸ்பெண்ட் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்படுதவதற்கான உத்தரவு கடிதத்தை தலைமை அர்ச்சகரிடம் கோயில் நிர்வாக அதிகாரி விஜயன் அளித்துள்ளார். 

ஆனால் அதனை வாங்க மறுத்த மாதவ நம்பூதிரி, பாலக சேத்திர கோவிலின் பரம்பரை அர்ச்சகர் எங்களின் குடும்பத்தினர் எங்களை யாரும் நீக்க முடியாது என்று பதில் வாதத்தை முன்வைத்துள்ளார். 


Next Story