2019 தேர்தல்: 17 மாநிலங்களுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்தது பா.ஜனதா


2019 தேர்தல்: 17 மாநிலங்களுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்தது பா.ஜனதா
x
தினத்தந்தி 26 Dec 2018 1:00 PM GMT (Updated: 26 Dec 2018 1:00 PM GMT)

2019 நெருங்கும் நிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, 17 மாநிலங்களுக்கான கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.


புதுடெல்லி,

80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம் பாராளுமன்றத் தேர்தலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைக்கிறது. காங்கிரசும் இணையலாம் என பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் பா.ஜனதாவிற்கு எதிராக பெரும் கூட்டணி அமைய உள்ளது. கடந்த 2014 தேர்தலில் பா.ஜனதா 70க்கு மேற்பட்ட தொகுதிகளை வென்றது. இப்போது பெரும் சவாலை எதிர்க்கொள்ள உள்ளது. மாநிலத்தில் மூன்று பேரை பா.ஜனதா நிர்வாகிகளாக நியமனம் செய்துள்ளது. 

குஜராத் மாநில பா.ஜனதா தலைவர் கோவர்தன் ஜாதாபியா, கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் தயானந்த் கவுதம், மத்திய பிரதேச தலைவர் மிஸ்ரா ஆகியோர் உ.பி. மாநில நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரவிசங்கர் பிரசாத்தும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தாவர்சந்த் கெலாட்டும், பீகார் மாநிலத்திற்கு கட்சியின் செயலாளர் புபேந்தர் யாதவும், சத்தீஷ்காருக்கு அனில் ஜெயினும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை எம்.பி.  முரளிதரன் மற்றும் கட்சி செயலாளர் தியோதர் ராவ் ஆந்திர மாநில நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மகேந்திர சிங் அசாமிற்கும், ஒபி மாத்தூர் குஜராத் மாநிலத்திற்கும் நிர்வாகியாக  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, பஞ்சாப், தெலுங்கானா, சிக்கிம் உள்பட பிற மாநிலங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


Next Story