சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்கக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள ‘மகளிர் சுவர்’ போராட்டம் - தீவைப்பு, கற்கள் வீச்சால் பதற்றம்


சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்கக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள ‘மகளிர் சுவர்’ போராட்டம் - தீவைப்பு, கற்கள் வீச்சால் பதற்றம்
x
தினத்தந்தி 1 Jan 2019 10:45 PM GMT (Updated: 1 Jan 2019 7:51 PM GMT)

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள “மகளிர் சுவர்” போராட்டம் நடந்தது. கற்கள் வீச்சு, தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கேரளாவின் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. சபரிமலை கோவில் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களும் நடந்தன.

சபரிமலை கோவிலுக்கு சென்ற இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சமீபத்தில் அய்யப்ப பக்தர்கள் காசர்கோட்டில் உள்ள ஹோசங்காடியில் இருந்து கன்னியாகுமரி வரை அய்யப்ப ஜோதி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதற்கு போட்டியாக நேற்று மாநில அரசு ஆதரவுடன் இடதுசாரிகள் “மகளிர் சுவர்” போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், இந்த போராட்டத்தில் 50 லட்சம் பெண்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவித்து இருந்தார்.

வடக்கில் காசர்கோட்டில் இருந்து தெற்கில் திருவனந்தபுரம் வரை 620 கிலோமீட்டர் தூரத்துக்கு மகளிர் சுவர் போராட்டம் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதனை முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கிவைத்தார். முன்னதாக அவர் சமூக சீர்திருத்தவாதி அய்யங்காலி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாநிலத்தின் 14 மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் வரிசையாக நின்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல லட்சக் கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். மதசார்பற்ற தன்மையை பாதுகாக்கவும், பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும், சமுதாயத்தை மீண்டும் இருண்ட காலத்துக்கு தள்ள முயற்சிப்பவர்களுக்கு எதிரான தகவலை பரப்புவதற்காகவும் இந்த போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இதில் எழுத்தாளர்கள், விளையாட்டு வீராங்கனைகள், நடிகைகள், அரசியல்வாதிகள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், குடும்ப பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் சில இடங்களில் பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் மனித சுவர் போராட்டத்தை நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்டு தலைவர் ஆன்னி ராஜா உள்பட பலர் இதில் பங்கேற்றனர். சுகாதார மந்திரி கே.கே.சைலஜா போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். வெள்ளயம்பலத்தில் பிருந்தா காரத் மகளிர் சுவரின் கடைசி நபராக கலந்துகொண்டார்.

இதற்காக பள்ளிகளுக்கு நேற்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

கன்ஹான்காட் அருகே உள்ள சேத்துகூனு என்ற இடத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிலர் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மீது கற்களை வீசினர். ரெயில் தண்டவாளத்தை ஒட்டிய அந்த பகுதியில் இருந்த புதர் மற்றும் மரங்களுக்கும் தீவைத்தனர்.

இதனால் வெப்பம் காரணமாக அந்த பகுதியில் நிற்க முடியாததால் 500 மீட்டர் தூரத்துக்கு மகளிர் சுவர் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

கடந்த 26-ந் தேதி கம்யூனிஸ்டு தொண்டர்கள் சிலர் காசர்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களில் அய்யப்ப ஜோதி போராட்டத்துக்கு சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசினர். இதற்கு பதிலாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என தெரிகிறது.


Next Story