இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்


இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 2 Jan 2019 8:00 PM GMT (Updated: 2 Jan 2019 7:11 PM GMT)

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு(நேற்று) ஆஜராகி, கஜா புயல் நிவாரண பணிகள் திருவாரூரில் இன்னும் நிறைவு அடையவில்லை என்றும், அந்த தொகுதியில் புயலின் பாதிப்பால் பலரும் தங்கள் உடைமைகளையும் ஆவணங்களையும் இழந்து இருப்பதால் பலர் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த முடியாமல் போகும் என்றும், எனவே, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முறையீடு செய்தார்.

அதற்கு நீதிபதிகள், இது குறித்து மனு தாக்கல் செய்யுமாறும், அதன்பிறகு அதன் அவசர தன்மை குறித்து முடிவெடுப்பதாகவும், தற்போது உடனடியாக அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி மாரிமுத்து தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் முன்பு வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் முறையிட்டார். ஆனால், அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story