மேகதாது அணை விவகாரத்தில் தொடர் அமளி: நாடாளுமன்றத்தில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம்


மேகதாது அணை விவகாரத்தில் தொடர் அமளி: நாடாளுமன்றத்தில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம்
x
தினத்தந்தி 3 Jan 2019 12:15 AM GMT (Updated: 2 Jan 2019 9:11 PM GMT)

மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த அ.தி.மு.க., தி.மு.க., எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக கட்சிகள், இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் இதற்கு அனுமதி அளிக்கப்படாததால் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடரின் முதல் நாளில் இருந்தே இரு அவைகளின் அலுவல்களும் முடங்கி வருகின்றன.

இந்த பிரச்சினை நேற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலை கிளப்பியது. மக்களவை காலையில் கூடியதும் இந்த பிரச்சினையை எழுப்பிய அ.தி.மு.க. எம்.பி.க்கள், சபையின் மையப்பகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த விவகாரம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்த அவர்கள், தமிழகத்துக்கு நியாயம் வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால் மக்களவையில் கேள்வி நேர அலுவல்கள் தடைபட்டன. உறுப்பினர்களின் இந்த ஒழுங்கீன செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இது உங்கள் மாநிலத்துக்கு நல்ல செய்தியை கொண்டு செல்லாது என கண்டித்தார். மேலும் உறுப்பினர்கள் அனைவரும் அமைதி காக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும் அ.தி.மு.க. உறுப்பினர்களின் அமளி தொடர்ந்தது. அவர்களுடன் தெலுங்குதேசம் எம்.பி.க்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சபை நண்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மதியத்துக்கு மேல் சபை மீண்டும் கூடிய போது ரபேல் விவகாரம் குறித்த விவாதம் நடந்தது. அப்போதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேகதாது பிரச்சினையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். சபையில் காகிதங்களை வீசியெறிந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மாலையில் அவை மீண்டும் கூடிய போது அவை விதி எண் 374 ஏ-ன்படி அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கூறினார். அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்து வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் 25 பேரை 5 நாட்கள் இடைநீக்கம் செய்வதாக அவர் அறிவித்தார்.

அதன்படி அசோக் குமார், பரத் மோகன், அரி, மகேந்திரன், நாகராஜன், பரசுராம், வசந்தி, அன்வர் ராஜா உள்ளிட்ட 25 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களது பெயரை கூறி இந்த உத்தரவை பிறப்பித்த சபாநாயகர், பின்னர் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

இதற்கிடையே மேகதாது பிரச்சினையை முன்வைத்து மாநிலங்களவையிலும் தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்பியதால் காலையில் பலமுறை சபை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 2 மணிக்கு சபை மீண்டும் கூடிய போதும் இதேநிலை தொடரவே, அவை விதி 255 மற்றும் 256-ன் படி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். உறுப்பினர்களின்தொடர் அமளியால் நாடாளுமன்ற நடைமுறை அவமதிப்புக்கு உள்ளாவதாக அவர் கூறினார்.

அவைத்தலைவரின் உத்தரவுப்படி தி.மு.க. உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், மைத்ரேயன், விஜிலா சத்யானந்த், முத்துகருப்பன் உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது குறித்து பல்வேறு கட்சித்தலைவர்களுடன் நேற்று காலையில் வெங்கையா நாயுடு 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குளிர்கால கூட்டத்தொடரில் இன்னும் 4 அமர்வுகள் மட்டுமே இருக்கும் நிலையில், முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் கிடப்பில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதைப்போல மேகதாது பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அரசையும் அவர் கேட்டுக்கொண்டார். அதன்பேரில் அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி விரிவாக பேச்சுவார்த்தை நடத்துவார் என தமிழக எம்.பி.க்களிடம் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி விஜய் கோயல் கூறியதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story