டெல்லி அதிகார மோதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு: வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

டெல்லி அதிகார மோதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து, வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நிலவியது. பல்வேறு விஷயங்களில் இரு தரப்பும் தங்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது என மோதியது. இதன் நீட்சியாக இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
தீர்ப்பில், இணைச்செயலாளர் மற்றும் அந்த அந்தஸ்திற்கு மேல் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உண்டு என நீதிபதி சிக்ரி தெரிவித்தார். இணைச்செயலாளர் அந்தஸ்திற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருவார்கள் எனவும் கூறினார்.
அதேபோல ஊழல் தடுப்பு பிரிவு, விசாரணை ஆணையம் ஆகியவையும் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்திற்குள் தான் வரும் என நீதிபதி சிக்ரி தெரிவித்தார். காவல்துறை தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுக்கு இல்லை என்றும் கூறினார். ஆனால் மற்றொரு நீதிபதியான அசோக் பூஷண் இதற்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். இதன் காரணமாக இவ்வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story