இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் படுகொலை: நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: ராகுல் காந்தி


இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் படுகொலை: நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 18 Feb 2019 5:09 AM GMT (Updated: 18 Feb 2019 5:09 AM GMT)

இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கேரளா காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்த கிரிபேஷ் (24) மற்றும் சரத் லால் (29) ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அடித்துக்கொல்லப்பட்டனர்.  அடையாளம் தெரியாத அந்த நபர்கள் காரில் சென்று இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசியல் ரீதியான மோதலால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே இருவர் கொலைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம் என இளைஞர் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த கொலையை கண்டித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி காசர்கோடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ கசார்கோடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருவர் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொலைகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story