தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை நமது பொதுவான கவலைகளாகும்- சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்


தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை நமது பொதுவான கவலைகளாகும்- சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்
x
தினத்தந்தி 20 Feb 2019 9:26 AM GMT (Updated: 20 Feb 2019 9:26 AM GMT)

தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை நமது பொதுவான கவலைகளாகும் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கூறி உள்ளார்.

புதுடெல்லி:

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார்.

இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்று ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்றார். பிரதமர் மோடியும் உடனிருந்தார்.  

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, சவுதி இளவரசர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
.
பின்னர் பேட்டி அளித்த மோடி கூறியதாவது:-

சவுதி அரேபியா இந்தியாவின் மிக மதிப்புமிக்க மூலோபாய பங்காளிகளில் ஒன்றாகும். நம் உறவுகள் வலுவாக வளர்ந்துள்ளன. நான் இந்திய உள்கட்டமைப்புகளில்  சவுதி முதலீடுகளை வரவேற்கிறேன்.

 பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பது  நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்.

இந்தியா, சவுதி இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.

பாகிஸ்தானை தனிமைப்படுத்த உலக நாடுகள் கை கொடுக்க வேண்டும், தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் . பயங்கரவாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை புல்வாமா தாக்குதல் உலகிற்கு காட்டியுள்ளது என கூறினார்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கூறியதாவது:-

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஒரு பொதுவான கவலையாக உள்ளது - இந்திய உளவுத்துறைக்கு  ஒத்துழைப்பு தருவோம். இந்தியாவுடன் மட்டுமல்லாமல், நமது அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்போம். அதில் சாதகமான  பங்களிப்புக்காக இந்தியாவுக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம் என கூறினார்.

Next Story