எத்தியோப்பியாவில் விமான விபத்து: போயிங் 737 ரக விமானங்களுக்கு தடையா? - மத்திய அரசு பரிசீலிக்க முடிவு


எத்தியோப்பியாவில் விமான விபத்து: போயிங் 737 ரக விமானங்களுக்கு தடையா? - மத்திய அரசு பரிசீலிக்க முடிவு
x
தினத்தந்தி 11 March 2019 9:30 PM GMT (Updated: 11 March 2019 8:47 PM GMT)

எத்தியோப்பியாவில் விமான விபத்துக்கு காரணமான போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியதில், 157 பேர் பரிதாபமாக இறந்தனர். இதே ரக விமானம்தான் கடந்த அக்டோபர் 29-ந் தேதி இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது என்பதால் அந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக சீனா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு விமான நிறுவனங்கள் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் அந்த ரக விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமா என்பது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில் 2 தனியார் நிறுவனங்கள் இந்த ரக விமானங்களை இயக்கி வருகின்றன. மொத்தம் 21 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

Next Story