7 தொகுதிகளை விட்டுத்தருவதாக அறிவிப்பதா? காங்கிரஸ் மீது மாயாவதி, அகிலேஷ் யாதவ் பாய்ச்சல்


7 தொகுதிகளை விட்டுத்தருவதாக அறிவிப்பதா? காங்கிரஸ் மீது மாயாவதி, அகிலேஷ் யாதவ் பாய்ச்சல்
x
தினத்தந்தி 18 March 2019 11:45 PM GMT (Updated: 18 March 2019 10:54 PM GMT)

சமாஜ்வாடி–பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 7 தொகுதிகளை விட்டுத் தருவதாக அறிவித்த காங்கிரஸ் கட்சிக்கு மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உங்களுடன் கூட்டணி கிடையாது, குழப்பம் உண்டாக்காதீர்கள் என்று கூறியுள்ளனர்.

லக்னோ, 

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூட்டங்கள் நடத்தி ஆலோசனை நடத்தியபோதிலும், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கைவிட்டு விட்டன.

சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தாமல் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்துள்ளன.

இதனால், வேறு வழியின்றி, உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய லோக்தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்காக 7 தொகுதிகளை விட்டுத்தருவதாக உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் நேற்றுமுன்தினம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு, மாயாவதிக்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் காங்கிரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:–

உத்தரபிரதேசம் உள்பட நாடு முழுவதும் காங்கிரசுடன் எங்களுக்கு கூட்டணி கிடையாது. அதை தெளிவாக தெரிவித்து விடுகிறோம்.

காங்கிரஸ் கட்சி, உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திக் கொள்ளட்டும். எங்களைப் பொறுத்தவரை பா.ஜனதாவை தனியாகவே வீழ்த்துவோம். எனவே, தொகுதிகளை விட்டுத்தருவதாக கூறி, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் தன் பங்குக்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘உ.பி.யில் பா.ஜனதாவை தோற்கடிக்க எங்கள் அணிக்கு பலம் உள்ளது. எனவே, காங்கிரஸ் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்’’ என்று கூறியுள்ளார்.


Next Story