வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: ஐ.எம்.எப்


வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: ஐ.எம்.எப்
x
தினத்தந்தி 22 March 2019 3:28 AM GMT (Updated: 22 March 2019 3:28 AM GMT)

உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

உலக அளவில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்று சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.  கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முக்கியமான சீர்திருத்தங்களை இந்தியா, மேற்கொண்டுள்ளதாகவும், இன்னும் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

ஐ.எம்.எப் அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குநர் கெர்ர்ரி ரைஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதில் அளித்த ரைஸ் மேற்கண்டவாறு கூறினார். மேலும், அவர் கூறும் போது, “ உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரி 7 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது. பல முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீடித்த மற்றும் உயர் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் இன்னும் அவசியம் என நாங்கள் கருதுகிறோம். 

இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய தகவல்கள் விரைவில்  வெளியிடப்படவிருக்கும், உலக பொருளாதார பார்வை (WEO) ஆய்வறிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தால் அடுத்த மாதம் நடைபெறும் உலகவங்கியின் கூட்டத்தில் வெளியிடப்படும்” என்றார். 

தற்போது ஐ.எம்.எப் அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணராக இருக்கும் இந்திய அமெரிக்கரான கீதா கோபிநாத் தலைமையில் வெளியிடப்படும் முதல் அறிக்கையாக இந்த அறிக்கை இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.


Next Story