தேர்தல் ஆணையம் தடை விதிப்பு : அனுமன் கோவிலுக்கு சென்ற யோகி ஆதித்யநாத்


தேர்தல் ஆணையம் தடை விதிப்பு : அனுமன் கோவிலுக்கு சென்ற யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 16 April 2019 10:40 AM GMT (Updated: 16 April 2019 10:40 AM GMT)

தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்ய தடை விதித்ததை அடுத்து யோகி ஆதித்யநாத் அனுமன் கோவிலுக்கு சென்றார்.

தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியும், யோகி ஆதித்யநாத்தும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது. இதற்கிடையே மதரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய  மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. தேர்தல் ஆணையத்தை கடிந்து கொண்ட நீதிமன்றம், யோகி ஆதித்யநாத், மாயாவதி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வியை எழுப்பியது. விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் மீது நடவடிக்கையை எடுத்தது.  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் 72 மணி நேரம் (3 நாட்கள்) தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கவும் யோகி ஆதித்யநாத்துக்கு தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று பிரசாரத்திற்கு செல்லாத யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்றார். அங்கு 20 நிமிடங்கள் இருந்த அவர் சிறப்பு பூஜையை முடித்து விட்டு சென்றார். பத்திரிக்கையாளர்களின் கேள்வியை தவிர்த்துவிட்டு சென்றார். 

Next Story