இம்ரான் கான் வீசும் பந்தை ‘ஹெலிகாப்டர் ஷாட்’ அடிப்போம் - பிரதமர் மோடி


இம்ரான் கான் வீசும் பந்தை ‘ஹெலிகாப்டர் ஷாட்’ அடிப்போம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 April 2019 11:00 PM GMT (Updated: 17 April 2019 10:08 PM GMT)

“பா.ஜனதா வென்றால் நல்லது” என்று கூறிய இம்ரான்கானின் பேச்சுக்கு, அவர் வீசும் பந்தை ‘ஹெலிகாப்டர் ஷாட்’ அடிப்போம் என பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

புதுடெல்லி,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “இந்தியாவில் நடக்கும் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண நல்ல வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறியிருந்தார். இதன்மூலம், இம்ரான்கானுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், ஒரு ஆங்கில நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடியிடம் இம்ரான் கான் கருத்து பற்றி கேட்கப்பட்டது. அதற்கு மோடி கூறியதாவது:-

இம்ரான் கான் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை நாம் மறக்கக்கூடாது. இந்தியாவில் நடக்கும் தேர்தலை குழப்ப அவர் பந்தை திருப்பி போட முயற்சிக்கிறார். அதன் வெளிப்பாடுதான் அந்த கருத்து. ஆனால், அந்த பந்தை எப்படி ‘ஹெலிகாப்டர் ஷாட்’ அடிக்க வேண்டும் என்று இந்தியர்களுக்கு தெரியும்.

பாகிஸ்தானில் தேர்தல் நடந்தபோது, எனக்கு எதிராக இம்ரான் கான் எப்படியெல்லாம் பேசினார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பா.ஜனதாவை விமர்சிக்க அவரது வார்த்தைகளையே எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. இவ்வாறு அவர் கூறினார்.

மோடி மேலும் கூறுகையில், “பா.ஜனதா முன்பை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். முதல்கட்ட வாக்குப்பதிவு, எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ராணுவத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது என்றால், ராணுவம் குறித்து பொய்யான செய்தியை உருவாக்கி அனுதாபம் தேடுவது ஆகும். தற்போது அதுபோன்று நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை உணர்ந்துதான், குறைவான தொகுதிகளில் போட்டியிடுகிறது” என்றார்.


Next Story