காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டம் குறித்து பேசியது தொடர்பாக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
புதுடெல்லி,
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் உள்ள ஷாடோல் பகுதியில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டம் குறித்து பேசி மோடியை விமர்சித்தார்.
ராகுல் காந்தி கூறும் போது, பழங்குடியின மக்களை போலீசார் சுட்டுக்கொல்வதற்கு வகை செய்யும் புதிய சட்டத்தை மோடி இயற்றியுள்ளார். அந்த சட்டத்தின் படி, பழங்குடியினமக்களை தாக்கலாம், உங்கள் நிலங்களை அவர்கள் பறிக்கலாம், வனங்களை விட்டு வெளியேற்றலாம் , உங்களின் குடிநீரை அபகரிக்கலாம், பழங்குடியினர்களை சுடவும் செய்யலாம் என்று அந்த சட்டம் சொல்கிறது” என்று பேசினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என புகார் அளிக்கப்பட்டது. இதன்படி, 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தற்போது வரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Related Tags :
Next Story