பாலியல் புகாரில் சிக்கிய பீகார் காப்பகத்தில், 11 சிறுமிகளை கொன்று புதைத்தது அம்பலம் - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. பரபரப்பு தகவல்


பாலியல் புகாரில் சிக்கிய பீகார் காப்பகத்தில், 11 சிறுமிகளை கொன்று புதைத்தது அம்பலம் - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 3 May 2019 10:30 PM GMT (Updated: 3 May 2019 10:10 PM GMT)

பாலியல் புகாரில் சிக்கிய பீகார் காப்பகத்தில், 11 சிறுமிகளை கொன்று புதைத்ததுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. பரபரப்பான தகவலை தெரிவித்தது.

புதுடெல்லி,

பீகாரின் முசாபர்பூரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் காப்பகம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு தங்கி இருந்த ஏராளமான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காப்பக நிர்வாகி பிரஜேஷ் தாகூர் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். இந்த விவகாரத்தை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், முசாபர்பூர் காப்பகத்தில் தங்கி இருந்த 11 சிறுமிகள் பிரஜேஷ் தாகூர் மற்றும் கூட்டாளிகளால் கொன்று புதைக்கப்பட்டதாகவும், சிறுமிகளின் எலும்புக்குவியல் தோண்டி எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் விசாரணை 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story