வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 6 May 2019 9:30 PM GMT (Updated: 6 May 2019 8:13 PM GMT)

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரும் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

சென்னை மண்ணடியைச் சேர்ந்த அண்ணல் அம்பேத்கர் சட்ட சங்கத்தின் தலைவர் எம்.சீனிவாசன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் கமிஷன் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக நிர்வாகத்துறையில் பணியாற்றிய 66 முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் மனு அளித்து உள்ளனர். வாக்களித்த பிறகு மின்னணு எந்திரங்களில் முறைகேடுகளை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு கட்டத்திலும் ஓட்டுப்பதிவு முடிவடைந்ததில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில், அந்த எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும், இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story