தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் அட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடா? - மத்திய அரசு விளக்கம்


தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் அட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடா? - மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 11 May 2019 10:00 PM GMT (Updated: 11 May 2019 9:14 PM GMT)

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில், அட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடு உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி, அந்த குற்றச்சாட்டை நிராகரித்தது.

முன்னதாக இந்த புகார் கிளம்பியவுடனே, மேற்படி குற்றச்சாட்டு குறித்து ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து நீதிபதிகளுக்கும் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.

இது மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், இந்த விவகாரத்தில் அரசுக்கும், அட்டார்னி ஜெனரலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை மத்திய அரசு மறுத்து உள்ளது.

இது தொடர்பாக நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது டுவிட்டர் தளத்தில், ‘பார் கவுன்சிலின் மிக மூத்த உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு (அட்டார்னி ஜெனரல்) சில பிரச்சினைகளில் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். அவரது ஆலோசனையின் நோக்கத்தை மத்திய அரசு மதிக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் அவருடன் கருத்து வேறுபாடு என்ற செய்திகள் முற்றிலும் தவறானவை’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூலம் விசாரிக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என 2-வது கடிதத்தில் அட்டார்னி ஜெனரல் குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story