‘‘இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி’’ நாடாளுமன்ற தேர்தல் முடிவு பற்றி பிரதமர் மோடி கருத்து


‘‘இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி’’ நாடாளுமன்ற தேர்தல் முடிவு பற்றி பிரதமர் மோடி கருத்து
x
தினத்தந்தி 23 May 2019 11:50 PM GMT (Updated: 23 May 2019 11:50 PM GMT)

இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது குறித்து பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், பா.ஜனதா வெற்றியை இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:–

அனைவரும் ஒன்றாக வளருவோம், ஒன்றாக வளமை அடைவோம், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை ஒன்றாக சேர்ந்து உருவாக்குவோம். இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. இந்தியா மீண்டும் வென்றது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜனதா தலைவர் அமித் ஷா, ‘‘மீண்டும் ஒருதடவை மோடி அரசு. நன்றி இந்தியா’’ என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ‘‘மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் உறுதியான ஆதரவு கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நம்பிக்கை வைத்துள்ளனர். தற்போது, மோடி புதிய இந்தியாவை கட்டமைப்பார்’’ என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறுகையில், ‘‘எதிர்க்கட்சிகள் எத்தனையோ சாக்குபோக்குகளை தெரிவித்தன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை குறை கூறின. முழுமையான முடிவுகள் வந்த பிறகு வாக்காளர்களை குறை கூற மாட்டார்கள் என்று நம்புகிறோம். அவர்கள் மக்கள் தீர்ப்பை மதித்து, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.


Next Story