மோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா...! வாக்கு வங்கியிலும் பா.ஜனதா ஆதிக்கம்


மோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா...! வாக்கு வங்கியிலும் பா.ஜனதா ஆதிக்கம்
x
தினத்தந்தி 24 May 2019 9:13 AM GMT (Updated: 24 May 2019 9:13 AM GMT)

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மோடியின் அலையை மேற்கு வங்காளத்தில் தடுக்க தவறினார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்ததும் சற்று சறுக்கல் நேரிடும் என எதிர்பார்த்த பா.ஜனதா மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய கிழக்கு மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தியது. மேற்கு வங்காளத்தில் 23 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டு களமிறங்கியது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவியது. அது வாக்கு எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கிறது. 

மாநிலத்தில் 23 தொகுதிகளில் வெல்வோம் எனக் களமிறங்கிய பா.ஜனதா அதனை நிறைவேற்றும் வகையில் முன்னிலையை பெற்றது.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றிப்பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. கடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றிப்பெற்று இருந்தது. இம்முறை 12 தொகுதிகள் குறைவாக வென்றுள்ளது. காங்கிரஸ் இந்த போட்டிக்கு இடையே இரு தொகுதிகளில் வென்றது. மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரிகள் படுதோல்வியடைந்தது. கடந்த தேர்தலில் இரு தொகுதிகளை மட்டும் வென்ற பா.ஜனதா இம்முறை 18 தொகுதிகளை தனதாக்கியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்ற உறுதியேற்றுள்ள பா.ஜனதாவிற்கு சாதகமான போக்காக இது தென்படுகிறது.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவிற்குமான வாக்கு வங்கியில் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 43.28% வாக்குகளைப் பெற்றுள்ளது. பா.ஜனதா 40.25% வாக்குகளைப் பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி 6.28% வாக்குகள், காங்கிரஸ் 5.61% வாக்குகளைப் பெற்றுள்ளது. மம்தாவின் கோட்டையில் பா.ஜனதா இதுபோன்ற வெற்றியை தனதாக்கியுள்ளது அக்கட்சியினருக்கே ஆச்சர்யம் அளிக்கும் விதமாக உள்ளது. பிற மாநிலங்களைவிடவும் மேற்கு வங்காளத்தில்தான் பா.ஜனதாவிற்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கப்பட்டதாக பார்க்கப்பட்டது. கிழக்கு மாநிலமான மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் வெற்றி பா.ஜனதாவினருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

2021-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதைய முடிவு திரிணாமுல் காங்கிரசுக்கு மிகவும் முக்கியமானதாகும். இப்போது குறிப்பிட்டு சொல்லப்போனால் சிங்கத்தை அதனுடைய கோட்டையிலே வேட்டையாடியுள்ளது பா.ஜனதா என்பதுதான் உண்மையாகும். மக்களுடைய பெருவாரியான ஆதரவு பா.ஜனதாவிற்கு கிடைத்துள்ளது. மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கணிப்பும் உண்மையாகியுள்ளது. மாநிலத்தில் இடதுசாரிகள் வாக்குகள் அப்படியே பா.ஜனதாவிற்கு செல்கிறது, இனி நமக்கு காவியும், சிகப்பும் ஒன்றாக இணைந்த எதிரிகள் என திரிணாமுல் காங்கிரஸ் உள் கள ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அது இப்போது அப்படியே உண்மையாகியுள்ளது. மம்தாவிற்கு பெரும் சவாலாக இடதுசாரிகள் வாக்கும், நடுத்தர மக்களின் வாக்கும் பா.ஜனதாவிற்கு சென்றுள்ளது.

இதற்கிடையே இடதுசாரிகளின் தலைமையிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க பா.ஜனதாவிற்கு ஆதரவு என்ற நகர்வு காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இப்போதைய தேர்தல் முடிவுகள் அதுவும் உண்மையாக இருக்கலாம் என்பதை பிரதிப்பலிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுகுதா ராய் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு அப்படியே பா.ஜனதாவிற்கு சென்றுள்ளது என்பதற்கு இதுவே ஆதாரமாகும். மாநிலத்தில் இடதுசாரிகளும், வலதுசாரிகளும் ஒன்றாக பணியாற்றுகிறார்கள் என மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறிவந்தார். இப்போது அது உண்மையாகியுள்ளது,” எனக் கூறியுள்ளார். 

Next Story