டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு


டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
x
தினத்தந்தி 26 May 2019 7:52 AM GMT (Updated: 26 May 2019 7:52 AM GMT)

டெல்லியில் பிரதமர் மோடியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.  இந்த தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேச கட்சியின் தலைவரான முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.  அக்கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றியது.

இதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார்.  அவரை ஆளுநர் நரசிம்மன் முறைப்படி ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.  இதற்கான விழா விஜயவாடாவில் வரும் 30ந்தேதி நடைபெறுகிறது. 

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  இதையடுத்து, 30ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.  இந்த சந்திப்பில் ஜெகன் மோகனுடன் விஜய சாய் ரெட்டி மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்களும் உடனிருந்தனர்.

Next Story