பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராடுவோம்: ராகுல் காந்தி ஆவேசம்


பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராடுவோம்: ராகுல் காந்தி ஆவேசம்
x
தினத்தந்தி 1 Jun 2019 7:20 AM GMT (Updated: 1 Jun 2019 7:20 AM GMT)

பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.

புதுடெல்லி,

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி, செயற்குழு கூட்டத்தில் கூறியதாக தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்தியின் ராஜினாமா கோரிக்கையை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்து விட்டது. 

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகக்கூடாது என்று பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர். காங்கிரஸ் தொண்டர்களும் கூறி வந்தனர். ஆனாலும், ராகுல் காந்தி இவ்விவகாரம் குறித்து மவுனம் காத்து வருகிறார். 

இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய அறையில், காங்கிரஸ் கட்சி எம்.பிக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- “ காங்கிரசுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், சிறப்புடன் பணியாற்றிய தொண்டர்களுக்கும் எனது நன்றி. நாட்டு மக்களுக்காக நாம் பணியாற்ற வேண்டும். 

அதற்காகவே மக்கள் நம்மை தேர்வு செய்துள்ளனர்.  அரசியல் சட்டத்தை பாதுகாக்கவே நாம் போராடுகிறோம் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் மனதில் கொள்ள வேண்டும், காங்கிரஸ் எம்.பி.க்கள் 52 பேரும் ஒவ்வொரு நாளும் பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடுவார்கள். 

ஒவ்வொரு இந்தியனுக்காகவும் நீங்கள் (எம்.பி.க்கள்) போராட வேண்டும். வெறுப்புணர்வும், காட்டுமிராண்டித்தனமும், கோபமும் உங்களுக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறது. நீங்கள் இன்னும் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும்” என்றார். 

Next Story