காந்தி பற்றி அவதூறு டுவீட்; ஐ.ஏ.எஸ். அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை


காந்தி பற்றி அவதூறு டுவீட்; ஐ.ஏ.எஸ். அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Jun 2019 12:14 PM GMT (Updated: 3 Jun 2019 2:51 PM GMT)

மகாத்மா காந்தி பற்றி அவதூறு டுவீட் வெளியிட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரி கடந்த மே 17ந்தேதி வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் செய்தியில், நமது கரன்சி நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் முகத்தினை நீக்கும் நேரமிது.  உலகம் முழுவதும் உள்ள அவரது சிலைகள், கல்வி அமைப்புகளுக்கு சூட்டிய அவரது பெயர், அவரது நினைவாக சாலைகளுக்கு வைத்த பெயர் ஆகியவற்றையும் நீக்க கூடிய நேரம் வந்துள்ளது.

கடந்த 1948ம் ஆண்டு ஜனவரி 30ந்தேதிக்காக கோட்சேவுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.  இந்த பதிவை பின்னர் அவர் நீக்கி விட்டார்.  இந்தியா விடுதலை பெற சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற குற்றச்சாட்டில் கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார். 

இந்த நிலையில், மகாத்மா காந்திக்கு எதிராக சர்ச்சை பதிவிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜிதேந்திரா ஆவாத் கூறியுள்ளார்.

நாதுராம் கோட்சேவை நிதி புகழ்ந்து உள்ளார்.  இதனை சகித்து கொள்ள முடியாது.  அவரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story