கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 10 July 2019 5:41 AM GMT (Updated: 10 July 2019 5:41 AM GMT)

கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர்.  எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 பேர் என 14 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இவர்கள் தனி விமானம் மூலம் மும்பை அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாரதீய ஜனதா செய்ததாக காங்கிரஸ்–ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.  இதன் காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பற்றி சபாநாயகர் முடிவு எதுவும் எடுக்கவில்லை.  இதுபற்றி அவர் கூறும்பொழுது, சில விதிகளின்படி முடிவுகள் எடுக்கப்படும்.  அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும்.  இந்த முடிவை எடுப்பதற்கு காலவரை எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

இதனிடையே சபாநாயகர் சந்திப்புக்கு பின் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அரசின் நிலைத்தன்மையை சீர்குலைப்பது என்பது பா.ஜ.க.வின் வழக்கம்.  மக்கள் எங்களுக்கு அதிக வாக்குகளை அளித்துள்ளனர்.  காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) ஆகிய இரு கட்சிகளுக்கு இணைந்து 57 சதவீதத்திற்கு கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்த முறை பா.ஜ.க. அணி மட்டுமின்றி, தேசிய அளவிலான தலைவர்களான அமித் ஷா மற்றும் திரு.மோடி ஆகியோரும் கர்நாடக அரசியல் விவகாரத்தில் தொடர்பு கொண்டுள்ளனர்.  அவர்களது உத்தரவின்பேரிலேயே அரசை கவிழ்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

இது ஜனநாயகம் மற்றும் மக்களின் தீர்ப்புக்கு எதிரானது.  அவர்கள் பணம், பதவி, மந்திரி அந்தஸ்து ஆகியவற்றை தருகிறோம் என கூறுகின்றனர்.

கட்சி விரோத நடவடிக்கைக்காக உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும்படி கர்நாடக காங்கிரசார் கோரி வருகின்றனர்.  உறுப்பினர்கள் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து உள்ளனர்.  அவர்கள் திரும்பி வரவேண்டும்.  ராஜினாமாவையும் திரும்ப பெற வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன் என கூறினார்.

இதன்பின் அவர், இந்த உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் மனு ஒன்றை நாங்கள் அளிக்க உள்ளோம்.  ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என்றும் கேட்டு கொள்ள இருக்கிறோம்.  இதுதவிர்த்து, அடுத்து 6 வருடங்கள் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

இதனிடையே, மும்பை ஓட்டலில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திக்க கர்நாடக மந்திரி சிவக்குமார் சென்றார்.  அவருக்கு எதிராக ஜனதாதளம் (எஸ்). தலைவர்களில் ஒருவரான நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள் ஓட்டலின் வெளியே நின்று கொண்டு திரும்பி போ, திரும்பி போ என கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில், கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.  அவர்கள், அரசியலமைப்பு கடமையை சபாநாயகர் கைவிட்டு விட்டார்.  தங்களது ராஜினாமாவை ஏற்பதில் வெளிப்படையாகவே அவர் காலதாமதம் செய்து வருகிறார் என தங்களது மனுவில் அவர்கள் குற்றச்சாட்டாக குறிப்பிட்டு உள்ளனர்.  இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

Next Story